Wednesday 6 October 2010

தோல்களிலுள்ள அழுக்கை நீக்கணுமா?

ஒவ்வொருவரின் சருமத் தோலிலும், நுண் துளைகள் காணப்படும். இவை, உடலில் சேரும் கழிவுகள், தண் ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை வெளியேற்ற உதவுகிறது. தோலில் காணப்படும் துளையில், கழிவுகள் சேர்ந்து அடைத்துக் கொள்ளும் போது, அவற்றில் தோலின் ஆரோக்கியம் கெடுதல், தொற்று ஏற்படுதல் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. 


கண்ணுக்குத் தெரியாத வகையில் காணப்படும் தோலின் நுண் துளைகள், பருக்கள் மற்றும் கொப்புளங்கள் ஆகியவற்றால், கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு பெரிதாகி, அழகை கெடுக்கும் வகையில் காணப்படுகிறது. எண்ணெய் வகை சருமத்தினருக்கே, இப்பிரச்சினை ஏற்படுகிறது. ஏனென்றால், அவர்களின் தோலின் துளைகளில் அதிகளவு 'செபம்' நிறைந்து காணப்படுகிறது.
* முகத்தில் தோன்றும் பருக்களை கிள்ளுதல்.
* முறையாக சுத்தம் செய்யாதது.
* தரம் குறைந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றாலும் இப்பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ...
வீட்டில் மேற்கொள்ளும் சிகிச்சை முறைகள்:
* காய்கறிகள், பழங்கள் அல்லது மூலிகைகள் அடங்கிய 'பேஸ் பேக்'குகள் தோலில் விரிவடைந்த துளைகளை சரி செய்ய உதவுகிறது. நன்கு மசிக்கப்பட்ட தக்காளியுடன் சில துளி எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தேய்த்து கழுவினால், சிறப்பான பலன் கிடைக்கும். முதலில் தோலை சுத்தப்படுத்தும் விதிமுறைகளை கையாள வேண்டும். அதன் பின் 5 நிமிடங்கள் ஆவி பிடித்த பின், தோலில் விரிவடைந்த நுண் துளைகளை சரி செய்வதற்கான பராமரிப்புகளை மேற்கொள்ளலாம்.
* ஓட்மீலுடன் வெள்ளரிச்சாறை கலந்து முகத்தில் பூசி 2 நிமிடங்கள் முதல் 3 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவலாம்.
* ஆரஞ்சு தோல் பவுடர், ஓட்மீல் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, அதற்கு இரண்டு பங்கு தேன் மற்றும் ஒன்றரை பங்கு அளவிற்கு தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி, 5 நிமிடங்கள் முதல் 7 நிமிடங்கள் வரை, வட்ட இயக்கத்தில் நன்கு தேய்த்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். (கண்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தவிர்க்க வேண்டும்).
தோல் சிகிச்சை நிபுணரிடம் மேற்கொள்ளும் சிகிச்சை:
மீசோதெரபி மற்றும் மீசோபோடக்ஸ்:
இந்த சிகிச்சை முறையில், மிகச் சிறிய அளவு வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள், தாதுச்சத்துக்கள் மற்றும் போடக்ஸ் ஆகியவை நேரடியாக முகத்தில் காணப்படும் தோலில், மிக நுண்ணூசி மூலம் செலுத்தப்படும். ஆனால், இதுபோன்ற சிகிச்சைகள் அனைவருக்கும் பொருந்தாது. நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற, இது போதும் என்ற திருப்தியான மனதுடன் இருப்பவர்களுக்கு, வீட்டில் தயாரிக்கப்படும் கடலை மாவு, மஞ்சள் பொடியே போதும்.