Friday 3 December 2010

மாசு மருவற்ற முகம் வேண்டுமா?


ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை அவன் முகத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். அதனால் தான் நம் முன்னோர்கள் முகத்தை கண்ணாடியாக கூறினார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் விளக்கம் இதுதான்.மாசு மருவற்ற முகம் பெற சில குறிப்புகள்:

பால் பவுடர் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
பாதாம் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
இவைகளை நன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு முகத்தை நன்றாக கழுவி பருத்தியினாலான துணியால் மென்மையாகத் துடைத்து பின் கலந்து வைத்துள்ள கலவையை முகத்தில் பூசி 10 அல்லது 15 நிமிடங்கள் வைத்திருந்து பின் முகத்தைக் கழுவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இரு வாரங்கள் செய்துவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகச்சுருக்கம் மாறி முகம்பொலிவு பெறும்.
வாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாக பிசைந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும்.
நகை அணிந்து கருத்துப்போய் உள்ள கழுத்துப்பகுதிகளிலும் தடவினால் கருப்பு நிறம் மாறும்.
மஞ்சள் தூள் - 10 கிராம் எடுத்து, அதனுடன் ஆரஞ்சு சாறு 100 மில்லி கலந்து முகம் மற்றும் சூரிய ஒளி படும் பகுதிகளில் பூசி, 20 நிமிடங்களுக்கு ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் மற்றும், வெயிலால் கருத்துப்போன பகுதிகள் நிறம் மாறும்.
கேரட் சாறு - 50 மி.லி., அன்னாசிப்பழச் சாறு - 50 மி.லி. எடுத்து ஒன்றாகக் கலந்து கருத்தப் பகுதிகள் மேல் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு 1 வாரம் தொடர்ந்து செய்து வந்தால் கருமை மாறி முகம் பளிச்சிடும்.
ஒரு கப் தயிருடன் வெள்ளரிச்சாறு கலந்து முகத்தில் தடவினால் முகம் பளபளக்கும்.
சந்தனத்தூள் - 10 கிராம், எடுத்து அதில் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் குளிப்பதற்கு முன் உடலில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சருமம் பளபளப்பாகும்.
வறண்ட முகம் பளபளக்க:
கறிவேப்பிலையையும், மருதாணி இலைகளையும் தனித்தனியே நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, 
கறிவேப்பிலை பொடி 1/2 டீஸ்பூன், மருதாணி பொடி 1/2 டீஸ்பூன் எடுத்து நீர்விட்டு குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட முகம் பொலிவு பெறும்.
தேன் - 1 டீஸ்பூன், தக்காளிச்சாறு - 1 டீஸ்பூன் எடுத்து கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பூச கருமை நிறம் மாறி முகம் பளபளக்கும்.