Friday 26 November 2010

திருக்குறள்-வழிபாடு

1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை

ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.


2.கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின்

முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான்

ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.


30மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின்

புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.


4.வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப்

பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.


5.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு

புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை

ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.


6.பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும்

கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய

நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு

நிலையானதாக அமையும்.


7.தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி

நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை

தீர வழியேதுமில்லை.


8.அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால்,

அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி

நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக்

கடப்பது என்பது எளிதான காரியமல்ல.


9.கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும்,

அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான்

ஈ.டற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி

நடக்காதவனின் நிலையும் ஆகும்.


10.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர்,

தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.