Sunday 28 November 2010

திருக்குறள்-செய்ந்நன்றியறிதல்

111. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

``வாராது வந்த மாமணி'' என்பதுபோல், ``

செய்யாமற் செய்த உதவி'' என்று புகழத்தக்க

அரிய உதவி வழங்கப்பட்டால்,

அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈ.டாக மாட்டா.


112. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

தேவைப்படும் காலத்தில் செய்யப்படும்

உதவி சிறிதளவாக இருந்தாலும்,

அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.


113. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே,

அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.


114. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட

அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில்

பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.


115. உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச்

சிறப்படைவதில்லை அந்த உதவியைப்

பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.


116. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது

துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.


117. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு

என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல,

ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின்

தூய்மையான நட்பை நினைத்துப்

போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.


118. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல

அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும்

அக்கணமே மறந்து விடுவது நல்லது.


119. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்.

ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட

நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட

வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச்

செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.


120. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு

ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.