Sunday 28 November 2010

திருக்குறள்-அடக்கம் உடைமை

131. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும்.

அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.


132. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது

அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தரக்

கூடியது வேறொன்றும் இல்லை.


133. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்.

அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து

அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின்

பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.


134. நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற

அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு,

மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.


135. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும்.

ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு,

மேலும் ஒரு செல்வமாகும்.


136.ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.

உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும்

ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி,

காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.


137.யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும்

நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்.

இல்லையேல் அவர் சொன்ன சொல்லே

அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.


138. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல்,

பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக

இருந்து துன்பம் விளைவிக்குமானாலும்,

அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.


139. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும் ஆனால்

வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள்

விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.


140. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும்

பண்பு கொண்டவரை அடைந்திட

அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.