Sunday 28 November 2010

திருக்குறள்-வாழ்க்கைத் துணைநலம்

51. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள்

வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள்,

கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.


52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை

எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும்

அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.


53. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.

நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில்

எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத

வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.


54. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின்

உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால்,

அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?


55. தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை

விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி

பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற

மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.


56. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும்

காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும்

புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.


57. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன்

வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.


58. பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால்,

பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய

உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.


59. புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள்,

தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து

நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.


60. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு

அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.