Monday 14 February 2011

தீவினையச்சம்

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை யென்னுஞ் செறுக்கு.

தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்;

தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச்

சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.



தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத்

தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட

அஞ்சிட வேண்டும்.



அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய

செறுவார்க்குஞ் செய்யா விடல்.

தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை,

எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது;

அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை

அறம் முற்றுகையிட்டு விடும்.



இலனென்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகும் மற்றுப் பெயர்த்து.

வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈ.டுபடக்கூடாது;

அப்படி ஈ.டுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.



தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்.

வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது

என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச்

செய்யாமல் இருக்க வேண்டும்.



எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென் றடும்.

ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால்,

அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத்

தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.



தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயா தடியுறைந் தற்று.

ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல்,

தீய செயல்களில் ஈ.டுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல்,

தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.



தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்

துன்னற்க தீவினைப் பால்.

தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம்

சிறிதளவுகூட நெருங்கலாகாது.



அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்.

வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு

எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.