Monday 14 February 2011

அழுக்காறாமை

 
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்

தழுக்கா றிலாத இயல்பு.

மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை

ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.



விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்.

யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு

வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு

அவருக்கு வேறு எதுவுமில்லை.



அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணா தழுக்கறுப் பான்.

அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான்,

பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.



அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக் கறிந்து.

தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள்

பொறாமையினால் தீச்செயல்களில் ஈ.டுபடமாட்டார்கள்.



அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்

வழுக்கியுங் கேடீன் பது.

பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த

வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.



கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉ மின்றிக் கெடும்.

உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப்

பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை

மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும்,

உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.



அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.

செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது

அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக்

குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத்

தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.



அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும்

சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.



அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.

பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும்,

பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக

இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.



அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.

பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை;

பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.