Monday 14 February 2011

பயனில சொல்லாமை

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்.

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை

எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.



பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கட் செய்தலிற் றீது.

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச்

செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.



நயனில னென்பது சொல்லும் பயனில

பாரித் துரைக்கும் உரை.

பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே

அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.



நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லா ரகத்து.

பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல்

மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.



சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.

நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால்

அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.



பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்

மக்கட் பதடி யெனல்.

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன்

என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.



நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.

பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்;

ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.



அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்

பெரும்பய னில்லாத சொல்.

அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர்,

பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.



பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்.

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற

சொற்களைச் சொல்ல மாட்டார்.



சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்.

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய

சொற்களையே கூற வேண்டும்.